ஆஹா ஃபைண்ட் – புரொடியூசர் பஜார் – சங்ககிரி ராஜ்குமார் கூட்டணியின் ‘பயாஸ்கோப்‘ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
சங்ககிரி ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பயாஸ்கோப்’ திரைப்படத்தில் சத்யராஜ், சேரன், சங்ககிரி ராஜ்குமார், சங்ககிரி மாணிக்கம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மேலும் இந்த உண்மை கதையில் அசலான கதை மாந்தர்களே அவரவர் வேடங்களில் நடித்திருக்கிறார்கள். முரளி கணேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு தாஜ்நூர் இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தின் வெளியீட்டில் புரொடியூசர் பஜார் நிறுவனத்துடன் சங்ககிரி ராஜ்குமாரும் இணைந்திருக்கிறார்.
‘பயாஸ்கோப்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பும், ‘ஆஹா ஃபைண்ட்’ டிஜிட்டல் தளத்தின் தொடக்க விழாவும் சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆஹா டிஜிட்டல் தளத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரவிகாந்த், ஆஹா தமிழ் உள்ளடக்கம் மற்றும் வியூகங்கள் பிரிவின் மூத்த துணை தலைவர் கவிதா ஜௌபின், புரொடியூசர் பஜார் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜி.கே. திருநாவுக்கரசு, இணை நிறுவனர் விக்ரம், தொழிலதிபர் அதியமான், இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் , இசையமைப்பாளர் தாஜ்நூர் ஆகியோருடன் சிறப்பு விருந்தினராக இயக்குநர் கே. பாக்யராஜ் கலந்து கொண்டார்.
ஆஹா தமிழ் பிரிவின் உள்ளடக்கம் மற்றும் வியூகங்கள் பிரிவின் மூத்த துணை தலைவர் கவிதா ஜௌபின் பேசுகையில்,”ஆஹா தமிழ் அதன் தொடக்க தினத்திலிருந்து புதிய முயற்சிகளுக்கும், வித்தியாசமான கதைகளுக்கும் வாய்ப்பு வழங்கி வருகிறது. ஜல்லிக்கட்டை பின்னணியாகக் கொண்ட ‘பேட்டை காளி’ இணைய தொடர் ஆஹா தமிழில் வெளியானது. இதனை இயக்கியவரும் அறிமுக இயக்குநர் தான். இதனைத் தொடர்ந்து ‘ரத்த சாட்சி’, ‘உடன் பால்’ என வித்தியாசமான படைப்புகள் ஆஹா தமிழ் டிஜிட்டல் தளத்தில் வெளியாகின. அந்த வரிசையில் தற்போது ஆஹா ஃபைண்ட் எனும் புதிய முயற்சியை தொடங்கி இருக்கிறோம்.
நாம் தற்போது வாழ்க்கையில் வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறோம். எதையும் பார்ப்பதற்கு நமக்கு நேரமில்லை. நம்மில் பலரும் நிறைய முறை ரயிலில் பயணித்திருப்போம். ஆனால் எத்தனை பேர் ரயில் தண்டவாளங்களுக்கு இடையே முளைக்கும் சிறிய பூக்களை கண்டு ரசித்திருப்போம்? அந்த தண்டவாளங்களுக்கு இடையே நிறைய சுவாரசியமான விஷயங்கள் இருக்கின்றன. மஞ்சள் வண்ணத்திலும், ஊதா வண்ணத்திலும் பூக்கள் பூத்திருக்கும். அதேபோல் தமிழ் திரையுலகில் நிறைய நல்ல தரமான திரைப்படங்கள் நாள்தோறும் வருகை தந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் அவற்றை எப்படி சந்தைப்படுத்த வேண்டும் என்ற வழிமுறையை தெரியாதிருக்கிறார்கள். இதனால் நல்ல திரைப்படங்கள் பார்வையாளர்களின் கண்ணில் படாமல் மறைந்து விடுகின்றன. இந்த நிலை இனி ஏற்படக் கூடாது என்ற காரணத்திற்காக தொடங்கப்படுவது தான் ஆஹா ஃபைண்ட்.
இந்த டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் முதல் திரைப்படம் ‘பயாஸ்கோப்’. இதனை புரொடியூசர் பஜார் நிறுவனத்தினர் தான் எங்களிடம் அறிமுகப்படுத்தினார்கள். அவர்கள் எங்களுக்காக இந்த படத்தை திரையிட்டபோது இதன் திரைக்கதை உருவாக்கம், புது சிந்தனை ஆகியவற்றைக் கடந்து இந்த திரைப்படம் ஒரு குடும்பமாக எடுக்கப்பட்ட விதம் கவர்ந்தது. பொதுவாக பேரன்களுக்கு தாத்தா பாட்டிகள் கதை சொல்வார்கள். ஆனால் இந்த பயோஸ்கோப் படத்தில் பேரன் சொன்ன கதையை தாத்தா பாட்டி கேட்டதுடன் நில்லாமல் கடினமாக உழைத்து படத்தில் நடித்து தயாரித்திருக்கிறார்கள். அதனால் இந்தத் திரைப்படத்தை எங்களுடைய ஆஹா ஃபைண்ட் தளத்தில் முதல் திரைப்படமாக வெளியிடுவதில் பெருமிதம் அடைகிறோம்.
இந்த திரைப்படத்தை எங்களுக்கு அறிமுகப்படுத்திய புரொடியூசர் பஜார் நிறுவனத்தினர் இப்படத்தை நிறைய மக்களிடம் சேர்க்க வேண்டும் என்ற அவர்களின் விருப்பத்தை தெரிவித்தனர். அதற்காக அவர்களும் தங்களால் இயன்ற முழுமையான ஒத்துழைப்பை தற்போது வரை வழங்கி வருகிறார்கள். இதற்காக அவர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நிகழ்விற்கு ‘பைபிள் ஆஃப் ஸ்க்ரீன் ப்ளே’ கே. பாக்யராஜ் வருகை தந்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. அவருடைய கை வண்ணத்தில் உருவான ‘சுவரில்லாத சித்திரங்கள்’ படத்தை போல் தற்போது தமிழ் திரையுலகில் சித்திரத்தை வரையும் புது முகங்களுக்கு சுவராக ஆஹா ஃபைண்ட் இருக்கும். சத்யராஜ், சேரன், மிஷ்கின் ஆகியோர் வழங்கிய ஆதரவின் நீட்சியாகத்தான் ஆஹா ஃபைண்ட் இருக்கிறது. ஆஹா ஃபைண்ட் தளத்தில் தொடர்ந்து இது போன்ற புதிய முயற்சிகளுக்கும், புதிய திறமைசாலிகளுக்கும் வாய்ப்புகள் உண்டு. இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற வாழ்த்துகிறேன்,” என்றார்.
ஆஹா சிஇஓ ரவிகாந்த் பேசுகையில், ”ஆஹா தமிழ் 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை ஆஹா தமிழ் ‘பேட்டை காளி’, ‘ரத்த சாட்சி’, ‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’, ‘வேற மாதிரி ஆபீஸ்’ உள்ளிட்ட வெற்றி பெற்ற படைப்புகளை வழங்கி இருக்கிறது. ஆஹா தமிழ் பொழுதுபோக்கு தளம் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த படைப்புகளை வழங்கி வருகிறது. இதனுடைய அடுத்த கட்ட முயற்சியாக ஆஹா ஃபைண்ட் எனும் தளத்தை தொடங்கி இருக்கிறோம். ஆஹா தமிழ் டிஜிட்டல் தளம் புதிய திறமைசாலிகளுக்கு வாய்ப்புகளை வழங்கி வருகிறது. மேலும் அவர்களுடைய படைப்புகளை உலக அளவிலான ரசிகர்களுக்கு கொண்டு சேர்க்கிறது. ஆஹா ஃபைண்ட் தளத்தில் முதல் முயற்சியாக முதல் திரைப்படமாக சங்ககிரி ராஜ்குமார் இயக்கத்தில் உருவான ‘பயாஸ்கோப்’ வெளியிடப்படுகிறது. இதற்காக ஒத்துழைப்பு வழங்கிய புரொடியூசர் பஜார் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திரைப்படம் உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களை கவரும்,” என்றார்.
இசையமைப்பாளர் தாஜ்நூர் பேசுகையில், ”ஆஹா ஃபைண்ட் தளத்தில் பயாஸ்கோப் படம் வெளியாவது மகிழ்ச்சியை அளிக்கிறது. இதனை இணைந்து வழங்கும் புரொடியூசர் பஜார் நிறுவனத்திற்கும் நன்றி.
இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பது என்பது சவாலானதாக இருந்தது. இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் எப்போது சந்தித்து பேசினாலும் புதிய விஷயங்களை நிறைய சொல்லிக் கொண்டே இருப்பார். அது இந்தப் படத்திற்கு எனக்கு இசையமைக்க உதவியாக இருந்தது.
இந்த படத்தினை பார்க்கும் போது என்னையும் அறியாமல் சில இடங்களில் கண்ணீர் சிந்தியிருக்கிறேன். சில இடங்களில் புன்னகை பூத்திருக்கிறேன். இந்தப் படத்திற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும்